அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. எனவே கோயிலுக்குச் செல்பவர்கள் கிழக்கு வீதியிலுள்ள அம்மன் சன்னிதி வழியாகச் செல்வது வழக்கம். இந்த ஆலயம் மீனாட்சி, சுந்தரேஸ்வரரை முதன்மை விக்கிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்சமாகவும் கொண்டுள்ளது. இக்கோயில் அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. கோயில் வரலாறு
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது. நான்மாடக்கூடல்
மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர். ஆலவாய்
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. கோயிலின் அமைப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வ்யிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மற்ற வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்குக் கோபுரத்தில் சுதைகள் குறைவு. எனவே மொட்டைக் கோபுரம் எனப்படுகிறது. கிழக்குக் கோபுரம் மிகப் பழமையானது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. அஷ்டசக்தி மண்டபம்
அம்மன் சன்னிதியின் முன்பகுதி. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களிடையே மீனாட்சி கல்யாணம் கதைவடிவில் காட்சியளிக்கிறது. உள்ளிருக்கும் 8 பெருந்தூண்களிலும் அஷ்டசக்திகளின் சிலைகள் அழகுசெய்கின்றன. திருவிளையாடல் புராணக் காட்சிகள் நிறைந்த இம்மண்டபத்தில் மீனாட்சி, சமயக்குரவர், துவாரபாலகர், விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சிலைகளும் உள்ளன.மீனாட்சி நாயக்கன் மண்டபம்
மேலே யாளியும், கீழே சிறுசிற்பங்களும் நிறைந்த ஆறுவரிசைத் தூண்கள் இம்மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தையும், அஷ்டசக்தி மண்டபத்தையும் இணைக்கும் சிறுமண்டபத்தையும் வேடன், வேட்டுவச்சி சிலைகள் உள்ளன. மண்டபத்தின் மேற்குக் கோடியில் ஆயிரத்தெட்டு சிறு விளக்குகளைக் கொண்ட பித்தளையில் ஆன திருவாட்சி கண்களை கவர்கிறது. முதலிப்பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், கம்பத்தடி மண்டபம் ஆகியவையும் காண வேண்டியவை.பொற்றாமரைக் குளம்
உலகப் பொதுமறை திருக்குறள் இங்கு வைத்துத்தான் சங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்கிறது வரலாறு. குளம், நீண்ட சதுர வடிவில், அழகிய படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. வடக்குக் கரையிலுள்ள தூண்களில் சங்கப்புலவர்கள் 24 பேர்களின் சிலைகளைக் காணலாம். இரு தூண்களில் கோயிலை முதன்முதலில் கண்ட தனஞ்சயன் என்னும் வணிகனும், கோயிலையும், நகரையும் நிர்மாணித்த குலசேகரப் பாண்டியனும் காட்சியளிக்கின்றனர். சுவற்றில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.கிழக்குக் கரையில் நின்றுபார்த்தால் சுவாமி, அம்மன் கோயில்களின் தங்க விமானங்களைத் தரிசிக்கலாம். தெற்குக்கரை மண்டபச் சுவற்றில் திருக்குறள் முழுவதும் வெண்சலவைக் கற்களில் பதிக்கப் பெற்றுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னிதி
அம்மன் கோயிலுக்கு இரு பிரகாரங்கள் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் தங்கக் கொடிமரம், திருமலை நாயக்கர் மண்டபம், விநாயகர், கூடற்குமரர் சன்னிதிகள், செம்பால் ஆன இருபெரும் துவாரபாலகர்கள் ஆகியவை உள்ளன. கூடற்குமரர் சன்னிதியில் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றப்பட்டது. இதன் வாயிலாக அம்மன் கோயில் மகாமண்டபத்தை அடையலாம். சுந்தரேஸ்வரர் சன்னிதி
சன்னிதிக்கு இருபுறமும் 12 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் நிற்கின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் சிறு உருவங்களையும் காணலாம். உள்ளே முதல் பிரகாரத்தில் திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப்பட்ட ஆறுகால் பீடம் இருக்கிறது. அதில் செப்பால் ஆன துவாரபாலகர் சிலைகள் உள்ளன. சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்களையும், கலைமகள் கோயிலையும் காணலாம். உற்சவ மூர்த்தி, காசி விசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கை ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. தல விருட்சமான கடம்ப மரம், கனகசபை, யாகசாலை, இரத்தின சபை, சாட்சி கூறிய வன்னி கிணறு ஆகியவையும் இந்தப் பிரகாரத்தில் இருக்கின்றன. தவிர, சித்திரக் கோபுரம், வேம்பத்தூர் கோபுரம், நடுக்கட்டுக் கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் முதலான பல சிறிய கோபுரங்களும் சிறப்பானவை. வடக்கு ஆடிவீதியில், பெரிய கோபுரத்தை அடுத்து ஐந்து இசைத்தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 22 சிறு தூண்களைக் கொண்டது. தட்டினால் விதவிதமான இன்னிசை எழுப்புகின்றன இந்த அதிசயத் தூண்கள். புது மண்டபம்
கோயிலுக்கு வெளியே, கிழக்குக் கோபுரத்துக்கு எதிரில் வசந்த மண்டபம் என்னும் புது மண்டபம் உள்ளது. தடாதகை, மீனாட்சி கல்யாணம் , திருவிளையாடற் புராணம் போன்றவை அழகிய சிற்பங்களாக உள்ளன.கரும்பு தின்னும் கல்யானை, இராவணன் கயிலையைத் தூக்குவதும் சிற்பக்கலையின் சிறப்புக்கு சான்றுகள். அன்னை மீனாட்சி வரலாறு
கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு
அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, "என்ன வரம் வேண்டும் கேள்!" என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள். அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள். மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், "மீனாட்சி" என்று பெயர் பெற்றாள். இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். மீனாட்சி திருமணம்
மலயத்துவச பாண்டியன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது இறைவன் அசரீரியாக இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று கூறினார். இறைவன் கட்டனைப்படி குழுந்தைக்குத் "தடாதகை" எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது.மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் "கன்னிநாடு" எனப் பெயர் பெற்றது. தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார். கால் மாறி ஆடியவனின் கருணை
மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது. "ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?" என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான். "பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!" என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. சிவன் பாதம் பார்க்க வேண்டுமா
சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம்.பெரிய மூர்த்தி
பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும் இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். 'சதா' என்றால் 'எப்போதும்' என பொருள். எங்கு திரும்பினாலும் சிவனின் முகம். எதைக்கேட்டாலும் 'சிவசிவ' என்னும் மந்திர ஒலி. இதன் அடிப்படையில் உருவாக்கப் பட்டது 'சதாசிவம்' சிலை. இந்த சிலையை ஏழுநிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தில் காணலாம். திருநீறு விநாயகரை வணங்கிவிட்டு, அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் நின்று இந்த கோபுரத்தை கவனித்தால் அருமையான சதாசிவ தரிசனம் கிடைக்கும். அம்பிகை அணிவித்த மாலை
திருச்செந்தூர் முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்ற குமரகுருபரர், ஒரு சமயம் காசி யாத்திரை சென்றார். மதுரை வழியாக சென்ற அவர், இக்கோயிலுக்கு வந்தார். மீனாட்சியை வணங்கிய அவர், "பிள்ளைத் தமிழ்" பாடினார். திருமலை நாயக்கர் அவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை
மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர்.கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறை யை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது. முக்குறுணி விநாயகர்
மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. (6 கிலோ) இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது.அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம். இரட்டை விநாயகர்
மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங் களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.விபூதி விநாயகர்
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. "விபூதி" என்றால் "மேலான செல்வம்" என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்தருக்கு பூப்பந்தல் வழிபாடு
18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், “எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.உபதேச தட்சிணாமூர்த்தி
முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிவன், அஷ்டமாசித்திகளை உபதேசம் செய்தார். அவர்கள் அதனை மறந்து விட்டதால், கல்லாக மாறினர். தங்களுக்கு விமோசனம் வேண்டி பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) என்னும் தலத்தில் தவமிருந்தனர். அவர்களுக்கு இத்தலத்து சிவன், குருவாக இருந்து அஷ்டமாசித்திகளை மீண்டும் உபதேசித்தார். இவர் மதுரையில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் “உபதேச தெட்சிணாமூர்த்தி’யாக காட்சி தருகிறார். இவரை “வேததெட்சிணாமூர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள்.கொடிமரத்தில் சம்பந்தர்
சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோது, சம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார். சமண மதத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.கிளி ஏந்திய காரணம்
ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி
அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளை கண்களாலேயே பாதுகாப்பது போல காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை தெரியுமா!மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். இவரது ஞானத்தை கண்ட திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மிக வாழ்க்கையை கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர். நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார். ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் நடந்ததை தெரிவித்து கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, தீட்சிதர் உலகை ஈன்ற நாயகி மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார். மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது "ஆனந்த சாகர ஸ்தவம்" என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார். எட்டுகாலம் எட்டு கோலம்
தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.இந்த எட்டுகாலங்களில் முறையே மஹா�ஷாடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன ஒரு நாள் மட்டும் யானை பவனி
மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி,"யானை யானை அழகர் யானை ஆடுமாம் சொக்கர் கொம்பானை அழகரும் சொக்கரும் ஏறும் யானை" என்ற குழந்தை தாலாட்டுப் பாடலும் இருக்கிறது. முதல் திருவிளையாடல்
மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பவுர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.தாயுமானவர்
கம்பத்தடி மண்டபத்தில் வடக்கு நோக்கிய தூணில், கர்ப்பமான ஒரு பெண் நிற்பதையும், அவளுக்கு கீழே ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கும் நிலையில் நிற்பதையும் காணலாம். கீழே நிற்கும் பெண் “தாயுமானவர்’ எனப்படுவார். சிவபெருமானுக்கு “தாயுமானவர்’ என்று ஒரு பெயர் உண்டு. தனது பக்தையின் பக்திக்கு இணங்கி சிவபெருமானே பேறுகாலம் பார்த்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவருக்கு கோயில் திருச்சியில் உள்ளது. அந்தக் காட்சி இந்த தூணில் வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் ஆக இந்த சிற்பத்திற்கு எண்ணெய்க்காப்பிட்டு கர்ப்பிணிகள் வேண்டிக் கொள்கிறார்கள்.தூணில் சரபேஸ்வரர்
இரணியனைக் கொன்ற நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகி இங்கும் அங்கும் அலைந்தார். அசுரனின் ரத்தம் நரசிம்மரை கோபத்திற்கு ஆளாக்கியது. ஆவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் மனிதன், மிருகம், பறவை என்ற அதிசய உருவெடுத்து வந்து நரசிம்மரை ஆலிங்கனம் செய்து (தழுவுதல்) சாந்தப்படுத்தினார். இச்சரபப்பெருமான் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் காட்சிதருகிறார். ராகுகாலத்தில் வழிபாடு செய்கின்றனர்.மாறும் ஆட்சிகள்
ஒரு இல்லறம் நன்கு சிறக்க வேண்டுமானால் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவது அவசியம். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையில் சுவாமி ஆட்சி ஆறு மாதங்களும், அம்மன் ஆட்சி ஆறு மாதங்களும் மாறி மாறி நடைபெற்று வந்தது. அக்காலத்தில் சித்திரை திருவிழா கிடையாது. மாசியில் தான் விழா நடந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போதும் மாசி வீதியில் தான் சித்திரை திருவிழா பவனி நடக்கிறது.திருமலை நாயக்க மன்னர், சைவ, வைணவ ஒற்றுமை கருதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும், மீனாட்சி அம்மனின் மாசி திருவிழாவையும் சித்திரைக்கு மாற்றினார். விவசாயிகளின் ஓய்வுகாலம் கருதி சித்திரைக்கு விழாவை மாற்றியிருக்க வேண்டும். விழா மாற்றப்பட்ட பிறகு மீனாட்சியம்மனுக்கு சித்திரையிலும், சொக்கநாதருக்கு ஆவணியிலும் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதன் பிறகு அம்மன் சித்திரை முதல் 4 மாதமும், சுவாமி ஆவணி முதல் 8மாதங்களும் ஆட்சி புரிகின்றனர். மதுரையில் மீனாட்சிக்கே முக்கியத்துவம் என்றாலும், தன் கணவருக்கு ஆட்சிப்பொறுப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவள் விரும்பியதால் எட்டு மாதங்களாக மாறியது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ! புதன் தலம்
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக் கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.1877-ல் நடந்த கும்பாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1877-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதுகுறித்து டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் தனது நினைவுகளை எழுதியுள்ளார். அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்தார்கள். கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.மதுரைக்கு அன்றைய தினம் வந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர், சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் ஆகியோர் வந்திருந்தனர். நகரத்தில் எள் போட்டால் விழ இடமின்றி ஜனங்கள் நிறைந்திருந்தனர். கும்பாபிஷேகம் நடக்கும்போது கோயிலுக்குள் சென்றவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே தக்கவர்களுக்கு மட்டும் சீட்டு அளித்து உள்ளே விட்டார்கள். அப்போது மதுரையில் கலெக்டராக க்ரோல் துரை என்பவர் இருந்தார். அந்த சமயத்தில் மதுரை திருக்கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக் கொண்டு கோயிலைச் சுற்றி அசுத்தப் படுத்தினர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் செய்வித்த வெங்கடாசலம் செட்டியார் என்பவர் அதுகண்டு மனம் வருந்தினார். நிவர்த்தி செய்ய முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. இதுகுறித்து மணி அய்யரிடம் தெரிவித்தார். அவர் மிக்க இரக்கமுடையவர். அவரிடம் செட்டியார், "திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே. அதைச் சுற்றி ஜனங்கள் அசுத்தம் செய்கிறார்களே! இதைக்காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்," என்று முறையிட்டு வந்தார். மணிஅய்யர் அவர் கூறுவதன் உண்மையையும், அவருடைய சிவபக்தியையும் உணர்ந்தார். உடனே க்ரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதில்புறத்தே இருந்தவர்களுக்கு வேறு இடங்கள் வாங்கித்தந்தும், வீடு கட்ட பணம் உதவியும், நிலத்திற்கு விலை தந்தும் அவர்களை திருப்தி செய்வித்தார். பின்னர் வசதியான இடங்களில் அவர்களை குடியேற்றி பாதுகாத்தார். பின்னர் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து இரும்பு வேலி போடச் செய்தார். ககோளம் - பூகோளம்
மீனாட்சி கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்தால் நீங்கள் மிகவும் அதிசயப்படுவீர்கள். உங்கள் ஊரில் பாலாறு ஓடுகிறதா, தேனாறு ஓடுகிறதா என்று மேடைகளில் பேசி கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை எல்லாம் பார்க்கலாம்.ககோளம்
சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதைச்சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது.மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகத்தை பாதுகாப்பதற்காக தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்த விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர் உலகை இந்த ஓவியத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஓவியத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர் பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாகவீதி, விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன. பூகோளம்
இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பதுபோல மற்ற கிரகங்களில் பலவகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது.பாற்கடல், எண்ணெய்க்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், தேன்கடல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திர தீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை இந்த ஓவியத்தில் பார்க்கலாம். சிறப்பு விழாக்கள்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சித்திரை
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார்.அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது. வைகாசி
வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நக்ஷத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.ஆனி
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.ஆடி
ஆடி மாதத்தில் ஆயில்ய நக்ஷத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.ஆவணி
ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூல உற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல் திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.புரட்டாசி
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாக்ஷி அலங்கரிக்கப்படுகிறார். ஐப்பசி
ஐப்பசி மாதப் பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடி இருந்து கோலாட்டம் ஆட, உற்சவம் நடக்கிறது. கார்த்திகை
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.மார்கழி
மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு அர்த்த ஜாமம் முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.தை
தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.மாசி
மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது. இது கோயிலோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்லலாம்.பங்குனி
பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.
மேலும், இங்கு தினசரி பூஜைகள் செய்யப்படுவதுடன் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.சிறப்புக்கள்
சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார். சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது. மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த கும்பாபிஷேகங்கள்
1.7.1923 (ருத்ரோத்காரி ஆண்டு, ஆனி 17, புதன்கிழமை)28.8.1963 (சோபகிருது ஆண்டு, ஆவணி 12, புதன்கிழமை) 26.6.1974 (ஆனந்த ஆண்டு, ஆனி 12, புதன்கிழமை) 7.7.1995 (யுவ ஆண்டு, ஆனி 23, வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரை மாநகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலுமிருந்து பேருந்து, ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளது. விமானப் போக்குவரத்து வசதியும் உள்ளது. நகரப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கினால் மேற்குக் கோபுர வாசலையும், சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் வடக்கு, கிழக்குக் கோபுர வாசலையும் தெற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் தெற்குக் கோபுர வாசலையும், விளக்குத்தூண் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் கிழக்குக் கோபுர வாசலையும் சிறிது தூரம் நடந்து சென்று அடைய முடியும். |