குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. தல வரலாறு
திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் "கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது. முருகன் சன்னதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர். முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து செல்வோர் தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் இறங்கி எளிதில் இக்கோயிலுக்குச் செல்லலாம். காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். கிருத்திகை நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தொடர்பு கொள்ள:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர், சென்னை-600069. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91-44-2478 0436,93828 89430 |