|
திரும்பி வந்த சுகங்கள்
(கொரோனா ஊரடங்கில் ஒரு நாள்) காலைத் தூக்கம் கலைந்த போது காதில் விழுந்தது “சுவிக் சுவிக்” சாலை மரத்தில் சிட்டுக் குருவி சாய்த்துத் தலையைப் பார்த்தது என்னை. “இத்தனை நாளாய் எங்கே போனீர் எம்மை விட்டுக் குருவியாரே?” கொத்திய இரையை விழுங்கிக் குருவி கூறிய துரக்க “கிறீச் கிறீச்” காரும் பஸ்ஸும் லாரியும் ஆட்டோ காதைக் கிழிக்கும் சத்தமும் புகையும் “ஊரும் வேண்டாம் நீரும் வேண்டாம் ஓடிப்போனோம் வெகுதூரம் யாம்”. ***** போரூர் கோயிலில் மயில்களாட்டம் போனால் பொழுது பொசுக்கும் பசியில் பேரூர் வீட்டில் கதவைத் தட்டும் ‘போக்குவீர் எமது பசியினை மக்காள்’ ***** நடுத்தெரு தன்னில் படுத்தொரு சிறுத்தை நம்மைக் கண்டு சிறிதாய்ச் சீறும் ‘விடுப்புமக் கெமக்கிலை’ யென்று விளித்தெமை சேவல் இரையைத் தேடும். ***** எங்கோ போனோம் இயற்கையை விட்டு இன்று நாம் வீட்டில் கைதியாய் ஆனோம் இங்கே இருக்கிறேன் எங்கும் நானென இயற்கை படர்ந்தது எங்குமிவ் வுலகில். சின்னச் சுகங்கள் செலவிலாதெம்மைச் சேர்ந்திடும் வேளையில் சிந்தனையெனக்கு இன்னும் எத்தனை நாளிச் சுகங்கள்? இதற்கு மறைமுக விலையாய்ப் பேரிடர் என்றின்றிருக்கும் பூதப்பிடியின் இறுக்கம் தளர்ந்தொரு விடுதலையானால் நன்றாம் இயற்கையைப் பேணாதிழிந்து நகர வாழ்க்கையின் நரகம் சேர்வமா? |
|