கொரோனா கால விசன கவிதை! எண்ணங்களின் வடிகால் கவிதை. வற்றிப்போன எண்ணங்களுக்கு வடிகால் எதற்கு? (யாப்பைத் தேடாதீர் என் இலக்கணப் புத்தகத்தை விற்றுத் தின்கிறேன்). 1980கள்.... பொருளாதரத்துக்குப் புண்கள் வந்த காலம். “உலகமயமாக்கு... தாராளமாக்கு.... ஜீடிபியைப் பெருக்கு... உற்பத்தி செய்; விற்றுப்போகும்... கடைநிலை வரை சொட்டும்...” எத்தனைப் பொய்களய்யா ஏமாற்றி விற்றீர் உம் பொருளாதாரப் புரட்டை. நூறுகோடிப் பணக்காரர்களை. பரந்து விரித்தோம் - பணக்காரனுக்கும் ஏழைக்குமுள்ள இடைவெளியை கீழே ஒரு சொட்டு மேலே தங்கத்தட்டு களவாணிப் பயலுகளா! இது கொள்கையா? அன்றிக் ‘கொல்’கையா? (நாம் தாம் தொலைக்காட்சித் தமிழ் கற்றோமே!) வந்தது கொள்ளை நோய் வந்தனர் வீதிக்கு ஏழை மக்கள். “வாராதே தெருவுக்கு வந்தால் நோய் வரும் உன்னால் எனக்கும்” என்றனர் ஆள்பவர் ஆல் பவர் அவர்க்கே! ‘இஸ்திரி செய்தேன்’ ‘கீரை விற்றேன்’ ‘மூட்டை தூக்கினேன்’ ‘பெயின்ட் அடித்தேன்’ “நேற்று வந்த பணம் நேற்றே தீர்ந்தது இன்றைக்கென் பசிக்கு என்செய்வேன் யான்?” என்பவர் கேள்விக்கு ஏது பதில்? “ஏதோ கொஞ்சம் எடுத்துக் கொள் கொஞ்ச நாட்களே பொறுத்துக் கொள்” எண்சாண் உடம்புக்கு தீனி போட இடம் பெயர்ந்த ஏழைகள் எதையோ தின்று எங்கேயோ தங்கி ஏற்றுக் கொண்டனர். வருமாம் கொள்ளை நோய் மறுபடி இங்கு கொத்துக் கொத்தாய் மடிவரோ மக்கள் கொள்ளை நோயால் மட்டுமின்றி கும்பிப் பசியின் தீயால் கூட? எங்கே போனீர் எகனாமிஸ்டுகளே! என்னாயிற்றும் புரட்சிக் கொள்கைகள்? எங்கே அந்த ஏராள சொட்டுகள்? சட்டி காய்ந்தது ஆப்பைக்கேது? எடுத்து விடுவீரோ இன்னொரு புரட்டை? |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|