வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 16, 2019, 20:10 [IST] வேலூரில் தேர்தலை ரத்து செய்யக் கோரி கடந்த 14ம் தேதி தேர்தல் ஆணையம் தரப்பில் குடியரசு தலைவருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூரில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளார். அதே நேரம் வேலூர் மாவட்டத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்யவில்லை. அந்த தொகுதிகளில் அறிவித்தப்படி நாளை மறுதினம் (ஏப்ரல் 18) தேர்தல் நடைபெறும். வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டர். அப்போது, துரை முருகன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கைப்பற்றினர். பின்னர், இரு தினங்கள் கழித்து ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. 10 கோடி ரூபாய் வரை பணம் சிக்கியதாக கூறப்பட்டது. பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கு தமிழகத் தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. அதன்அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம், வேலூர் மக்களவை தேர்தலை ஒத்திவைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|