வியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 01, 2019, 07:00 [IST] உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அதனால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. எனினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் பெரிதான முன்னேற்றம் ஏற்படாத நிலையில், பிப்ரவரி, 27, 28 தேதிகளில் வியட்நாமில் இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த இரண்டு நாட்கள் நடந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, டிரம்ப் பாதியில் எழுந்து சென்றதால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதுகுறித்து டிரம்ப், ''மொத்தமாக பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்கின்றனர். அது முடியாது என்பதால் எழுந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோவுக்கும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் இல்லை,'' என்று கூறியுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா கூறும்போது, “மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான் சந்திப்பு இது. அணு ஆயுதங்களை அழித்தல், பொருளாதாரம் ஆகியவற்றை முன்னெடுக்கப் பல வழிகள் குறித்துப் பேசினோம். எந்த ஒப்பந்தமும் இந்தச் சந்திப்பில் எட்டப்படவில்லை. ஆனால் இரு நாடுகளின் குழுக்களும் எதிர்காலத்தில் சந்திக்க எதிர்நோக்கி உள்ளன” என்றார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|