விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 10, 2018, 18:35 [IST] இந்திய வங்கிகளில் கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியது. விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒரு வருடமாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இன்று (டிசம்பர் 10, 2018) தீர்ப்பு வெளியாகலாம் என்பதால் இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றிருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முடிவெடுக்க பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இந்த தீர்ப்பின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவுக்காக பாதுகாப்புமிக்க அறை ஒதுக்கீடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|