மெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 8, 2018, 11:25 [IST] ராஜாஜி ஹாலில் இருந்த ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராஜா, தமிழரசு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தீர்ப்பு முடிவைக் கேட்டுகதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மெரீனாவில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு நிலம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு கை விரித்து விட்டது. அதற்குப் பதிலாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து மெரினாவில் இடம் ஒதுக்கக்கோரி திமுக நேற்று இரவு அவசர வழக்காக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மேலும் மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு வழக்கறிஞர் துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை அவர்கள் 5 பேரும் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, அந்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். திமுக தாக்கல் செய்த மனு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திமுக மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் மெரினாவில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|