நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 04, 2018, 19:40 [IST] தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை விரிவு படுத்துவதிலும், டாஸ்மாக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவதில் மட்டுமே குறியாக இருக்கும் தமிழக அரசு, நீட் தேர்வு எழுத போதிய மையங்கள் அமைக்காத சிபிஎஸ்இ குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறது. டாஸ்மாக்குக்காக உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு, தமிழக மாணவர்கள் நலனுக்காக போராடாமல் அமைதி காக்கிறது. இதனால், கணிசமான தமிழக மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத ராஜஸ்தான், கேரளா என அலைக்கழிக்கப் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், இதர செலவுகளுக்காக மாணவர், தலா ஒருவருக்கு 1,000 ரூபாய் விதம் வழங்கப்படும் எனவும் பஸ் மூலம் செல்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து முன்பணமாக பெற்று கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகும், பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளை கொடுத்து மேற்படி தொகையை பெற்று கொள்ளலாம். முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நுழைவுச்சீட்டு நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும் எனவும் இதில் சிரமம் ஏற்பட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். அல்லது கட்டணமில்லா தகவல் மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சுமார் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே அமைக்கக் கோரிக்கை விடுத்தும் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்கவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|