நைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 02, 2018, 00:30 [IST] நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட முபி நகரில் உள்ள மசூதி அருகே இன்று போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 24 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். முதல் நபர் சரியாக மதியம் 1 மணி அளவில் குண்டை வெடிக்கச் செய்தார். அதை தொடர்ந்து 2வது நபர் 200 மீட்டர் தள்ளி இரண்டாவது குண்டை வெடிக்கச் செய்தார். தாக்குதலில் மசூதியின் கூரை வெடித்துச் சிதறியது. முபி நகரில் உள்ள மசூதியில் கடந்த ஆறு மாதங்களில் நடக்கும் 2வது தாக்குதல் ஆகும். சென்ற நவம்பரில் நடைபெற்ற தாக்குதல் பதின்ம பருவ இளைஞர் ஒருவர் நடத்திய தற்கொலை தாகுதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரிய அதிபர் முகம்மது புகாரியின் வாஷிங்டன் பயணம் நடைபெறும் சமயத்தில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிடம் இருந்து நைஜீரியா 12 போர் விமானங்களை வாங்குகிறது. மேலும் ஹெலிகாப்டர்கள் வாங்குவது குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இந்த புதிய போர் விமானங்கள் நைஜீரியாவின் தீவிர வாத எதிர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப், கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் பயங்கரவாதிகள் போராடி வருகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|