புலியை கம்பால் அடித்து துரத்திய வீரப்பெண் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 08:45 [IST] புலியை முறத்தால் அடித்து துரத்திய வீர தமிழ்ப் பெண்களைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம். அதே போன்ற உண்மை சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. ரூபாலி மெஷ்ராம் (23) மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் புறநகரில் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 29ம் தேதி இரவு தனது வீட்டு வாசலில் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஆடுகளை மோப்பம் பிடித்து புலி ஒன்று அங்கு வந்துள்ளது. இரவில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த ரூபாலி பட்டிக்குள் புலி செல்ல முயல்வதைப் பார்த்துவிட்டார். புலியை விரட்ட கையில் கிடைத்த கம்புடன் பாய்ந்துவிட்டார். ஆனால் புலி அவர் மீது தாக்க ஆரம்பித்தது. வெறும் கம்பைக் கொண்டு ரூபாலியால் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இந்நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த தாயார் ஜிஜாபாய், ரூபாலியை வீட்டிற்குள் இழுத்து கதவைச் சாத்தினார். இதையடுத்து அந்த புலி அங்கிருந்த ஒரு ஆட்டைக் கவ்விக் கொண்டு காட்டிற்குள் சென்றது. புலியுடனான இந்த மோதலில் தாயும், மகளும் காயமடைந்தனர். ரூபாளிக்கு முகம், இடுப்பு, தொடை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தாய் ஜிஜாபாய்க்கு நெற்றியிலும் தலையிலும், கையிலும் காயம் ஏற்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புலி தாக்கிய காயத்துடன் ரூபாலி மெஷ்ராம் தன் தாயுடன் சுயமி (செல்பி) எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்ற, அந்த புகைப்படம் வைரலாக பரவியது. நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் 5 நாட்கள் சிகிச்சை எடுத்த பின் ரூபாளியும் அவரின் தாய் ஜிஜாபாயும் வீடு திரும்பினர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|