காவிரி விவகாரம்: ஏப். 9ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 12:30 [IST] தமிழ்நாட்டுக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தண்ணீர் திறப்பை உறுதி செய்ய மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த காலக்கெடு மார்ச் மாதம் 30ம் தேதியோடு முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டது. மேலும் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கேட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது தமிழக அரசு. மேலும் தமிழக அரசு தான் தொடர்ந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழகத்தின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் கூறவில்லை. செயல்திட்டம் (ஸ்கீம்) என்றே குறிப்பிட்டோம். காவிரி பிரச்னையை முழுமையாகத் தீர்ப்பதற்குரிய திட்டத்தையே ஸ்கீம் எனத் குறிப்பிட்டோம். ஸ்கீம் என்ற வார்த்தை காவிரியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. வழக்கின் விசாரணை, வரும் 9-ம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|