நியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் : தொண்டர் தீக்குளிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 31, 2018, 15:20 [IST] தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதை கண்டித்து பவேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தீக்குளித்தவர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வைகோ பேசுகையில் “இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பல முறை கூறியிருக்கிறேன். தீக்காயமுற்ற இந்த தம்பியின் உடல் முழுவதும் எரிந்திருக்கிறது. இயற்கை அன்னை எப்படியாவது இந்த தொண்டரை காப்பாற்றித்தர வேண்டும். ரவியை நம்பி அவரது குடும்பம் உள்ளது. வேதனையோடு எனது கடமையை நடைபயணத்தை துவக்குகிறேன்.” என கூறி நா தழுதழுக்க கண்ணீர் விட்டார் வைகோ. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பழ.நெடுமாறன், சுப.உதயகுமார், வேல்முருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மதுரை, தேனி மாவட்டங்களில் 250 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்லும் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் தனது போராட்ட வியூகத்தை அமைத்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|