பாலேஸ்வரம் கருணை இல்ல வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 17:00 [IST] பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அங்கு தங்கியிருந்தவர்களை தமிழக அரசின் சமூக நலத்துறையினர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ததை எதிர்த்து பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. ‘எங்கள் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட ராமதாஸ் உள்பட 294 பேரை அதிகாரிகள் எங்கு அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை. தற்போது அவர்கள் சட்டவிரோத காவலில் உள்ளனர். எனவே, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்ட 294 பேரில் 12 பேர் இறந்து விட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை அளித்தது. இதையடுத்து நீதிபதிகள் “மனுதாரரின் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 294 முதியவர்களில் பலர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் சென்றவர்களில் எஞ்சியுள்ள 282 பேரையும் இன்றைக்குள் மீண்டும் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி இல்லாமல் சமூக நலத்துறையைச் சேர்ந்த அதிகாரி முதியவர்களை இடமாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சமூக நலத்துறையைச் சேர்ந்த அதிகாரி நாளை (28-03-2018) அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|