பழநி உற்சவர் சிலை மோசடி: ஸ்தபதி உள்பட 2 பேர் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 07:00 [IST] பழநி முருகன் கோயிலுக்கு 2004ம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளது. புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை 6 மாதங்களிலேயே கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல் 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர், ஐஐடி தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் அளித்து அந்தச் சிலையைப் பரிசோதித்ததில் கிட்டத்தட்ட 10% தங்கம் இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. அதன்படி திருத்தணி கோயிலில் இருந்து பெறப்பட்ட 10 கிலோவுக்கு பதில் கூடுதலாக 12 கிலோ என மொத்தம் 22 கிலோ தங்கம் அச்சிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிலை செய்ய வெளியில் இருந்து யாரிடமும் தங்கம் வாங்கவே கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், கூடுதலாக உள்ளதாகக் கூறப்படும் 12 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்தது. குற்றம் நடந்தது தெரிந்தும் 14 ஆண்டுகளாக கோயிலின் தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், தலைமை ஸ்தபதி முத்தையாவை நேற்று (25-03-2018) அதிரடியாக கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபவா முன் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 2004ல் அப்போதைய கோயில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்தவர். ஸ்தபதி முத்தையா மீது ஏற்கனவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|