குப்வாரா தாக்குதல்: 5 பாதுகாப்பு படையினர், 5 தீவிரவாதிகள் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 22, 2018, 06:10 [IST] காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹல்மாட்போரா பகுதியில், எல்லைக் கோட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை, 48 மணி நேரத்திற்கு பிறகு நேற்று புதன்கிழமை (21-03-2018) இரவு முடிவுக்கு வந்தது. குப்வாரா மாவட்ட போலீசார், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் பிராந்திய ராணுவம் ஆகியவை இணைந்து இந்த தாக்குதலை நடத்தின. எல்லைப் பாதுகாப்புக் கோட்டிலிருந்து இரண்டு மலைப் பள்ளத்தாக்குகளைக் கடந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் தீவிரவாதிகள் ஊருடுவியிருந்தனர். தீவிரவாதிகள் தங்களை அழைத்துச் செல்ல வந்தவர்களுடன் சேர்ந்து குப்வாரா நோக்கி பயணப்பட இருந்த நேரத்தில் போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். தீவிரவாதிகள் மசூதியில் மறைந்திருந்தனர். போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து வனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களில் 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் ஒருவன் மட்டும் உயரமான இடத்தில் இருந்ததால் அவனை நோக்கிச் சென்ற பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக சுட்ட வண்ணம் இருந்தான். கடைசியில் அவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தத் தாக்குதலில் தீபக் தெஷூ மற்றும் மொகம்மது யூசுப் என்ற இரு போலீசாரும், அஸ்ரப் ராதர் மற்றும் ரஞ்சித் கோல்கா என்ற இரு ராணுவ வீரர்களும் வீர மரணம் எய்தினர். வீர மரணம் எய்திய மூன்றாவது ராணுவ வீரர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறப்பு பாதுகாப்பு போலீஸ் ஜாவத் அகமதுவின் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏராளமான படைக் கருவிகளும், ஏகே 47 ரக துப்பாக்கிகளும், கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி, வீரமரணம் அடைந்த அனைவருக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|