ஜெயலலிதா தவறி விழுந்தார்: சசிகலா பிரமாண பத்திரம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 09:45 [IST] 2018 மார்ச் 12ம் தேதி சசிகலா தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களாக இன்றைய தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளவை வருமாறு: 2016 செப்டம்பர் 22ம் தேதி பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா சசிகலாவிடம் உதவி கேட்டார். உடனடியாக டாக்டர் சிவகுமார் உட்பட 2 பேர் கொண்ட மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்தனர். டாக்டர் சிவக்குமார் அப்போலோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டியின் கணவர் விஜய் குமார் ரெட்டிக்கு போன் செய்ததை அடுத்து, இரு ஆம்புலன்ஸ்கள் கிரீம்ஸ் சாலை மற்றும் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்பட்டன. அப்போலோ குழு ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் ஏற்றினர். பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பியது. அப்போது மருத்துவமனைக்கு செல்வதாக ஜெயலலிதாவிடம் சசிகலா தெரிவித்தார். அன்று ஏற்கெனவே இருமுறை டாக்டர் சிவக்குமார் ஜெயலலிதாவை பரிசோதித்தார். சசிகலா மருத்துவமனைக்கு செல்லலாம் எனத் தெரிவித்தும் ஜெயலலிதா மறுத்துவிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிறகு மன உளைச்சலால் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சர்க்கரை நோய் தீவிரமடைந்ததால், சென்னை நகருக்குள்ளேயே இருக்கும் ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது. செப்டம்பர் 19 முதல் அவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அதனுடனேயே அவர் செப்டம்பர் 21ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2014 நவம்பர் முதல் 2016 செப்டம்பர் வரை 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். அப்போலோவில் சிகிச்சை பெற்ற போது அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், 2016 அக்டோபர் 22ம் தேதி ஜெயலலிதாவைப் பார்த்தார். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரும் ஜெயலலிதாவை சிலமுறை பார்த்துள்ளனர். 2016 நவம்பர் 19ல் ஜெயலலிதாவை வேறு அறைக்கு மாற்றிய பின்னர் அமைச்சர் நிலோபர் கபிலும் பார்த்தார். ஜெயலலிதாவின் அனுமதியுடன் எடுக்கப்பட்ட 4 வீடியோக்களையும் விசாரணை ஆணையத்தில் சசிகலா சமர்ப்பித்துள்ளார். 2016 செப்டம்பர் 27 அன்று காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் 5 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துக்குமாரசாமி, ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதலமைச்சரின் செயலாளர்கள் ஆர்.ராமலிங்கம் மற்றும் கே.என்.வெங்கடரமணன் ஆகியோர் என சசிகலா பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|