தினசரி தியானம் |
சிறு செயல் செம்பொருளே, செயலில் சிறியது பெரியது என்னும் வேற்றுமை என் சிந்தையை விட்டு விலகியோடுக. உண்பது, உறங்குவது, ஓய்வெடுப்பது, பேசுவது போன்றவை பாமரர்க்குச் சிறு செயல்களாம். ஆனால் அவைகளில் மிளிரும் மாண்பு மேலோர்க்கே விளங்கும். அப்போதைக்கப்போது செய்ய வேண்டிய அலுவல்களை அவர்கள் ஆர்வத்துடன் புரிகின்றனர். தவறுதல் ஒன்றை மட்டும் அவர்கள் தவிர்க்கின்றனர். மற்று, அவசரப்படுவதும் ஒத்திவைப்பதும் அலட்சியப்படுத்துவதும் அவர்களுக்கில்லை. இங்ஙனம் சிறு செயல்களினின்று நிறைநிலை பெரியோர்க்கு வந்தமைகின்றது. செய்வதைச் செம்மையாகச் செய்வது யோகம். -பகவத்கீதை குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |